இந்தியா வல்லரசு வரிசையில் இடம் பெறும் வாய்ப்பை தவறவிட்டதா? சௌதி என்ன சாதித்தது?

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நடைபெற்று வரும் யுக்ரேன் -ரஷ்யா இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியை சௌதி அரேபியா தற்போது முன்னெடுத்துள்ளது. சவுதி அரேபியாவின் இந்த முயற்சியை இந்தியா முன்னெடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ரஷ்யா, யுக்ரேன் என இருநாடுகளுடனும் நட்புறவு கொண்டுள்ள நாடு என்பதே, போரை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியை இந்தியா மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்பட்டதற்கு முக்கிய காரணம்.

அத்துடன், மேற்கத்திய நாடுகளை அணுகுவது போன்று இந்தியாவை ரஷ்யா பார்க்காது என்ற புரிதலின் காரணமாக, போரை முடிவுக்கு வருவது குறித்த இந்தியாவின் யோசனையை ரஷ்யா நிராகரித்துவிடாது என்பதும் இந்தியா மீதான இந்த எதிர்பார்ப்புக்கு மற்றொரு காரணமாக இருந்தது.
ஆனால், இந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக பெரிய முயற்சியை இந்தியா இதுவரை முன்னெடுக்கவில்லை. மாறாக, போரை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சிகளை செளதி அரேபியா தற்போது முன்னெடுத்துள்ளது.

ரஷ்யா – யுக்ரேன் போரை முடிவுக்கு கொண்டு வர செளதி நடத்தியுள்ள முதல் கட்ட அமைதிப் பேச்சுவார்த்தை ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்துள்ளது. இந்த விவகாரத்தில் சவூதி அரேபியா முன்னிலையில் இருப்பதாக கருதப்படும் நிலையில், இந்தியா ஏன் இதுபோன்ற பகிரங்கமான முயற்சியை எடுக்கவில்லை என்ற கேள்வி எழுகிறது.